ஏழு நாட்களுக்கு பிறகு சசிகலா வைக்கப் போகும் புது செக்? கலக்கத்தில் பன்னீர் செல்வம்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கடந்த திங்கட் கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டனில் அமைச்சர்கள் பலர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.
இதில் தற்போதைய முதல்வராக உள்ள பன்னீர் செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டுவது உள்பட பல விஷயங்களை விவாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலா, அமைச்சர்களிடம் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.
என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.
தற்போது வரை பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்வி அதிமுக வட்டாரங்கள் இடையே எழுவதாக கூறப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் சசிகலா கவனித்து வருவதாகவும், சோ மறைவுக்கு வந்தபோது கூட அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்ததாகவும், ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் தன் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகளும் துரித வேகத்தில் நடை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா இறப்பை முன்னிட்டு ஏழு நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. அந்த ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் சசிகலா கொண்டு வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.