சமீபத்தில் வெளிவந்த தாதா 87 படத்தில் திருநங்கையாக நடித்து பரபரப்பு கிளப்பியவர் ஶ்ரீபல்லவி. ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். நேனா பிரகம் என்ற படத்தில் சரத்குமார் மகளாக நடித்தார். அதன்பிறகு தாதா 87 படத்தில் நடித்தார். தற்போது நீவாலே நேனுன்னா என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தாதா 87 படத்தில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு சொந்த ஊர் விசாகப்பட்டினம். எங்க குடும்பத்தில் எல்லோரும் ஆசிரியர்கள். எனக்கு ஆசிரியர் வேலை பிடிக்கவில்லை. இதனால் குடும்ப எதிர்ப்பையும் மீறி நடனம், நடிப்பு கற்றுக் கொண்டேன். தெலுங்கில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, இப்போது ஹீரோயின் ஆகிவிட்டேன். தமிழில், தாதா 87 பட வாய்ப்பு வந்தபோது, “இது திருநங்கை கேரக்டர் நிறைய நடிகைகள் நடிக்க தயங்கி ஒதுங்கி விட்டார்கள்” என்று கூறினார்கள். எனக்கு அந்த கேரக்டர் பிடித்திருந்தது. அதில் ஒரு அழகான காதல் இருந்தது. ஒப்புக் கொண்டு நடித்தேன்.
ஆண்கள் மாதிரி கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறும் காட்சியில் சிரமப்பட்டு நடித்தேன். இப்போது எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் நிறைய தமிழ் படங்களில் கடினமாக கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.