தமிழ்நாட்டில் சமூக வலைத்தளம் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துபவர்களில் நடிகை கஸ்தூரிக்கும் ஒரு இடம் உண்டு. சமீபகாலங்களில் அவர் அடிக்கடி இப்படி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.
சென்னையில் நேற்று சென்னை – கோல்கட்டா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி பற்றி கஸ்தூரி, “என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு, லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க,” என டுவீட் போட்டிருந்தார்.
அதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதனால், சற்று முன் அந்த டுவீட் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அது பற்றி முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது….
எம்ஜிஆர்., காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது.? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது.? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.
எம்ஜிஆர்., ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரச கலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள் தான்.
உடனே அமைதிப்படை அல்வா, தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு – நான் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.
எம்ஜிஆரை தலைவராகவும், தெய்வமாகவும் மட்டும் பார்த்து, நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.
இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.