சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள ஆதிரடி ஆக்ஷன் படம் ‛ஆக்ஷன். படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ‛‛சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.
சங்க மித்ரா தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ஆக்ஷன் தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது.
அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். இயக்குனராக நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார்.
90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.
எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.