என் இதயமே நொறுங்கிவிட்டது! பி.சி.சி.ஐ தவறால் 7 இந்திய வீரர்களின் கனவு தகர்ந்தது
பி.சி.சி.ஐ யின் தவறால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு கலைந்துள்ளது.
இலங்கையின் கொழும்புவில் வரும் 13 ஆம் திகதி முதல் யூத் ஆசியக்கிண்ண தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 1-9-1998க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது.
ஆனால், இதை சரியாக கவனிக்காத பி.சி.சி.ஐ இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான வயதை 1997 என தவறுதலாக அறிவித்துள்ளது.
இதனால், யூத் ஆசியக்கிண்ண தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தவறை கடைசி நேரத்தில் கவனித்த பி.சி.சி.ஐ அதிகாரிகள் அதிரடியாக 1997ல் பிறந்த 7 வீரர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டது.
இதனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற சந்தீப் தோமர் (உத்திர பிரதேசம்), திக்விஜய் ராங்கி (இமாச்சல பிரதேசம்), டாரில் பெரரியோ (கேரளா), ரிஷப் பகத் (பஞ்சாப்), சிமர்ஜித் சிங் (டில்லி), இசான் சயித் (மகாராஷ்டிரா), சந்தன் சாஹினி (ஹைதராபாத்) ஆகியோரின் கனவு கனவாகவே ஆகிவிட்டது.
இந்த தவறு குறித்து, பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது,
யூத் ஆசியக்கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மிகப்பெரிய குழப்பம் நடக்க இருந்தது.
அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் இதை எப்படியோ கவனித்துவிட்டோம். அதனால் கடைசி நேரத்தில் அவர்களின் பெயரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரிகளின் தவறு குறித்து மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போட்டியிலிருந்து பெயர் நீக்கப்பட்ட வீரர் ரிஷப் கூறியது,
கடைசி நேரத்தில் பி.சி.சி.ஐ., அதிகாரிகளிடமிருந்து ஒரு போன் வந்தது. மகிழ்ச்சியோடு போனை எடுத்த எனக்கு சோகம் தான் மிஞ்சியது.
இதற்கு நான் என்ன சொல்ல முடியும். எனது இதயமே நொறுங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.