பொருளாதார வீழ்ச்சியினால் உருவான அமைதியான மக்கள் போராட்டத்தை (அரகலய), திட்டமிட்ட முறையில் அரசியல் சதி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமாக ஒரு குழுவினர் மாற்றியமைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரகலயவின் போது இடம்பெற்ற வன்முறைகள், வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அமைதியான போராட்டத்தை திசைதிருப்பிய அரசியல் சூழ்ச்சிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இது குறித்து விசாரணை ஆணையம் கோரப்பட்டபோது, ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஒட்டுமொத்தப் போராட்டக் காலத்தையும் முழுமையாக மீளாய்வு செய்யாமல் தனித்தனி சம்பவங்களை மட்டும் விசாரிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்துத் தொடர்ந்தும் விமர்சித்த அவர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நான்கு நிலக்கரி கப்பல்களுமே தரமற்றவை எனத் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலக்கரி இறக்குமதிக்காகக் கொள்முதல் நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு விதிகளை அரசாங்கம் தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளதாகவும், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மூடிமறைக்க நிலக்கரி நிறுவனம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் தரமற்ற மருந்துகளை வழங்கிய அதே நிறுவனங்களே தற்போதும் மருந்து இறக்குமதியில் ஈடுபட்டு வருவதாகவும், முன்னைய ஆட்சியின் தவறுகளையே இந்த அரசாங்கமும் மீண்டும் தொடர்வதாகவும் அவர் சாடினார்.
தற்போதைய அரசாங்கம் ஊழலையும் மோசடியையும் நிறுவனமயப்படுத்தி வருவதாகத் தெரிவித்த வருண தீப்த ராஜபக்ச, கடந்த காலங்களில் மறைமுகமாக இடம்பெற்ற ஊழல்களை விடவும், தற்போது திருடுவதற்கென்றே ஒரு முறையான கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்களை வழங்குவதுடன், அரசியல்வாதிகளுக்கு நேரடியாகப் பணம் கைமாற்றப்படும் சூழல் நிலவுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இதேவேளை, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து முறையான தகவல்கள் நாட்டுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும், இலங்கைக் கடற்பரப்பில் உள்ள கோபால்ட், லித்தியம் போன்ற பெறுமதியான கனிம வளங்களை அகழ்வு செய்வதில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் போன்ற உணர்வுப்பூர்வமான விடயங்களை முதிர்ச்சியுடன் கையாள ஜனாதிபதி தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடல்சார் விவகாரச் செயலகத்தை ஜனாதிபதி கலைத்திருப்பது இலங்கையின் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.
நாட்டின் வளங்களைப் பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது வெளிப்படைத்தன்மை இன்றி கனிம வளங்களை அற்ப சலுகைகளுக்காக இழக்கத் தயாராகி வருவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
