பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது.
ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என கடந்த அரசாங்கத்திலிருந்த சகல தரப்புக்களும் கருத்துத் தெரிவித்திருந்தன என்பது மட்டுமல்ல, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்திருந்தன.
சிவில் அமைப்புக்களும், பாராளுமன்றத்திலுள்ள நடுநிலையான கட்சிகளும் கூட ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன.
உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு நாட்டின் அரசியல் கொந்தளிப்பை ஓரளவு குறைத்துள்ளது என்று கூறினால் தவறில்லை. ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புத் தீர்மானத்துக்கு எதிரான மனுத் தாக்கல் செய்த அனைவரினதும் ஒரே கருத்தாக இருந்தது, ஜனநாயகம் இன்னும் உயிர் வாழ்வதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்பதாகும்.
பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பானது அரசியல் கட்சிகளிடையே ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அரசாங்கத்திற்கு எதிராக இருந்த மக்கள் அபிப்பிராயத்திலும் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது என சாதாரண பொதுமகனும் கூற ஆரம்பித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
ஜனாதிபதியின் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இன்று இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதியே அந்த மனுக்கள் விசாரணை மீதான தீர்ப்பை அறிவிக்கவுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. யின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை பாராளுமன்றம் கூடுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக கூறினார்.
உயர் நீதிமன்றம் இன்று மாலை வழங்கிய தீர்ப்பையடுத்து இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் நேற்று இரவு விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் இன்று 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தல் விடுத்திருந்தார். இந்த அறிவித்தலின் பிரகாரமே நாளை பாராளுமன்றம் கூடுவதாகவும் சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் கூடினால், கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சிகள் விரும்பினால், உறுப்புரிமையை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என கருத்துக்கள் இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக இருந்தால், மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கும் சர்ச்சை எழும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
ஐ.தே.க. பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் பிரதமர் நியமனம் என்பனவற்றுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது சிக்கலாக மாறியுள்ளது.
நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணை சபையில் விடப்படுமா? இல்லையா? என்பது குறித்து இன்று காலை 8.30 மணிக்கு கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரினால் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் அவ்வாறு வாக்கெடுப்பொன்று நடைபெற்று ஐ.தே.முன்னணி வெற்றி பெற்றால், ஜனாதிபதி நிர்ப்பந்தத்துக்குட்படுகின்றார். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால், தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
காபந்து அரசாங்கத்தின் நிலை எண்ணவாகும் என்பது நாளை தெரியப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் குறித்த குரல் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தில் வழமையை விடவும் பதற்றமும், குழப்பமும் அதிகரித்தே இருக்கும் என்பது சாதாரண அரசியல் அறிவுள்ள ஒருவரினதும் எதிர்வு கூறலாக இருக்கும்.
ஐ.தே.க.யானது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால், மீண்டும் ஐ.தே.முன்னணி அரசாங்கமொன்று அமையும். இதன்பின்னர், ஜனாதிபதியின் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சரியானது என எதிர்வரும் 7 ஆம் திகதி அறிவிக்கப்படுமாயின் இடியப்பச் சிக்கல் இன்னும் தீவிரமடையும் என்பது பொதுமக்களின் நியாயமான கணிப்பீடாகும்.
நீதிமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்து, பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரிடம் உள்ளது.
நாளைய தினம் பாராளுமன்றம் கூடிய பின்னர், ஜனாதிபதியின் மற்றுமொரு அதிவிசேட அறிவித்தலின் படி மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.
முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவுள்ள கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் வீர ஆவேச முழக்கம் விடுத்துக் கொண்டிருப்பதும் ஐ.தே.கட்சிக்கு சவாலாகவே உள்ளது என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.