ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது.
முஹம்மது நபியின் பிறந்தநாளையொட்டி (மீலாதுன்நபி) உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றுகூடி தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
’இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பு ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம் நவம்பர் 24 தொங்கி 26-ம் தேதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறவுள்ளது.
இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வருகை தரும் இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள் மற்றும் மூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்க உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.