இலங்கையில் இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 72ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உப தலைவர்களில் ஒருவராகவும் செயற்படும் டாக்டர் ராஜித சேனாரத்ன, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சுகாதார அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளார்.
எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சிறந்த சுகாதார சேவையென்று தொனிப்பொருளில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 194 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்ததாவது,
உலக சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆரம்பித்துள்ளார். அந்த வேலைத் திட்டத்திற்கு இலங்கையின் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை சுகாதார துறையில் சிறந்த அடைவொன்றை எட்டியுள்ளது. உலக சுகாதார காப்புறுதியை மையமாகக் கொண்டு 5 வருட தேசிய திட்டமொன்றின் கீழ் சுகாதார சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குகின்றது. இலங்கை 7 தசாப்தகாலமாக உலக சுகாதார காப்புறுதியை அனுபவிக்கின்றதோடு, அதற்காக முறையான வேலைத்திட்டமும் உள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்துகின்றோம். 846 சுவதிவி நிலையங்களும் 906 சுவனாரி நிலையங்கள் மூலமும் மக்களின் நோய் அறிகுறிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
புகைத்தலை கட்டுப்படுத்த 90 வீத வரி மற்றும் ஒற்றை புகை பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கவும் நடவடிக்கையெடுத்துள்ளதால் புகைத்தல் வீதம் குறைவடைந்துள்ளது. மென் பானங்களின் சீனித் தன்மை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சீனி, உப்பு, சுவையூட்டிகள் பாவனையை குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியாக மருத்துகளை உற்பத்தி செய்யும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 16 மருந்துவகைகள் தொற்றா நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். இதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு இலவசமாக மருந்துவகைகள் வழங்கப்படுகின்றன.
இனங்காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 600 இரத்த பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு நிறைவில் அதனை 900ஆக உயர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று, மலேரியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீண்டும் மலேரியா ஏற்படும் நிலைமையைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் தோல் நோய்கள், டெங்கு, எச்.ஐ.வீ உட்பட பல நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற சேவைகள் பலதையும் வழங்கும் போது சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றன. மனித வள பற்றாக்குறை முக்கியமான ஒன்றாகும். திறமையானோரை வேலைக்கு இணைத்துக்கொள்வதோடு, அவர்களின் திறன்களை அபிவிருத்தி செய்வதும் முக்கியமாகும். மேலும் 3 வைத்திய பீடங்களை ஏற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம். புதிய தாதி பீடங்கள் மூலம் மேலும் 2000 தாதிகளுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கையெடுத்துள்ளோம். குடும்ப மருத்துவர் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையின் சுகாதார துறை அபிவிருத்திக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றேன்- என்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த தீர்மானங்களும் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் நிறைவேற்றுக் குழுவால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சுகாதார விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் இந்த மாநாட்டில் சுகாதார ஸ்தாபனத்தின் கொள்கைகள் வகுத்தல், நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம், அடிப்படைக் கொள்கைகளை ஆராய்தல் மற்றும் வருடாந்த வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் போன்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.