இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை ஊடாக செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தபா கமாலுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியட்நாமில் இடம்பெறும் இந்து சமுத்திர மாநாட்டுக்கு முன்பதாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. பங்களாதேஷ் பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.
மேலும் பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்த பங்களாதேஷின் செயற்றிட்ட அமைச்சர் முஸ்தபா கமால் தேயிலை, கடற்றொழில், மருந்து உற்பத்தி, கைத்தொழில் கல்வி போன்ற துறைகளுக்காக இலங்கையின் ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பங்களாதேஷின் கிரிக்கெட் துறையை மேம்படுத்த இலங்கையிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புக்களையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.