இலங்கை இராணுவ வீரர்களின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த மாலி தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழந்த இரங்கலை வெளியிட்ட அவர், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மாலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான கோழைத்தனமான தாக்குதல் நாட்டின் சமாதானத்திற்கான உறுதிப்பாட்டை தடுக்காது என்றும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்றைய தாக்குதலில் புர்கினோ ஃபாசோவை சேர்ந்த அமைதி காக்கும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.