சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவரும் முக்கிய இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாதென்பதற்காகவே வரவு- செலவு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென அக்கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாது, “எங்களது மக்களுக்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனாலும் சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்கின்றோம்.
இதேவேளை வரவு- செலவு திட்டத்தினை தோற்கடித்தால் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென மஹிந்த தரப்பினர் தெற்கு பகுதியில் கூறி வந்தனர்.
மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சதிப்புரட்சியை தோற்கடித்து நியாயத்தை நிலைநாட்டினோம். அதனை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் தற்போது வரவு- செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமையை தவறென விமர்சிக்கின்றனர்.
அன்று சதிப்புரட்சியை தோற்கடிக்க கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது சரியென்றால் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமையும் சரி என்பதே எங்களின் நிலைப்பாடு” என சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

