இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர்,நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கியவர்களே விஷ்ணு புத்திரர் வம்சத்தை சார்ந்தவர்கள்.
கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கோட்டைகள் நெடுந்தீவு, காரைநகர், ஊர்காவற்றுரை மற்றும் சில தீவுப்பகுதிகளில் அமைந்திருந்தது.
அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே நெடுந்தீவு கோட்டையாகும்.
இவ்விடங்களின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் கோட்டைகளைக் கட்டினர்.
இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான்.
போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது. முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன் பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால் வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு.
அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது.