இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள் மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பாகிஸ்தான், தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருக்கக் கூடாது என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பயங்கரவாதியான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தது. இருந்த போதும் சீனா மட்டும் ஆதரவு தராமல் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் சீனா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.