இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரச்னைகள் மற்றும் தீவிரவாதம் ஆகிய காரணங்களால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதில்லை என்று இந்தியா முடிவெடுத்துள்ளது. ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி இருநாடுகள் கிரிக்கெட் தொடருக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்வதையும் தவிர்த்து வந்தன. அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை உள்ளூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த முயற்சியின் முதல் வெற்றியாக தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூபிளசி தலைமையிலான உலக லெவன் அணியினர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்றனர். இது பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்புவதற்கான அறிகுறியாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த நிகழ்வைப் பார்க்கின்றனர். உலக லெவன் – பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் தொடருக்கு அங்கு ஏகோபித்த வரவேற்புக் கிடைத்தாலும், இந்திய அணி வீரர்களை மிஸ் செய்வதாக அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பாதுகாப்புக் காரணங்களுக்காக லாகூர் கடாஃபி மைதானத்தில் மட்டுமே உலக லெவன் அணியுடனான போட்டிகள் நடைபெற்றன. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்கிறது.
இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் நடத்துவதற்காக கடந்த 2014-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி கிரிக்கெட் தொடர் நடத்த இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஒத்துழைக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஐசிசி-யின் நிர்வாக தீர்ப்பாயத்தின் உதவியையும் பாகிஸ்தான் நாடியுள்ளது. இருநாடுகள் தொடர் நடைபெறாததால், தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், இருநாடுகள் கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்தில் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி-யின் தலைமை செயலதிகாரி டேவ் ரிச்சர்ட்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த ரிச்சர்ட்சன், ‘பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா தயாராக இல்லை எனும்போது, நாம் வற்புறுத்த முடியாது. உறுப்பு நாடுகளிடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதையே ஐசிசி விரும்புகிறது. இரண்டு உறுப்பு நாடுகள் இடையே பிரச்னை எழுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறோம். வணிகரீதியில் இந்தியா மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டாலும், ஐசிசி-யின் பார்வையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒரே மாதிரியானவைதான் என்று தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் தொடர்பான பிரச்னையைத் தீர்க்க மற்ற உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 3 நிர்வாகிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேதி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு வந்த உலக லெவன் அணியில் இந்திய வீரர் ஒருவர் இடம்பெற்றிருந்தாலும், அது மிகப்பெரிய கவனத்தை உலக அளவில் ஈர்த்திருக்கும் என்றும் அவர் கூறினார்.