பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல மாநிலங்களில் பாஜக வேட்பாளர்கள் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்களும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் அம்மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சரிசமமான பலத்துடன் இறுதிச்சுற்று முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், இவற்றுக்கு எல்லாம் மாறாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), ஆ.ராசா (நீலகிரி), ஜெகத் ரட்சகன் (அரக்கோணம்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்) மற்றும் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய முக்கிய பிரமுகர்கள் காலையில் இருந்தே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
மேலும் மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், வடசென்னை, சேலம், கடலூர், பொள்ளாச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளில் லட்சத்துக்கும் அதிமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தி.மு.க.வின் வெற்றிக் கணக்கில் முதல் வரவாக நீலகிரி தொகுதியில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.