பத்தரமுல்ல கல்வி அமைச்சிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளது.
இது குறித்து எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு நெருங்கியவர்கள், கல்வி அமைச்சுக்குள் இருந்து இவ்வாறான தாக்குதல்களை தம்மீது மேற்கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி ஆசிரியர் சங்கங்கள் சில ஒன்றிணைந்து கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.