ஆசியக்கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணிக்கு ஏமாற்றம்.. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியா
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 34 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது.
இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க முதலே நிதானமாக விளையாடிய இந்தியா சீரான ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டது.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஹிமன்சு ரானா 71 ஓட்டங்களும், சுப்மன் கில் 70 ஓட்டங்களும் குவித்தனர்.
இலங்கை அணி தரப்பில், நிபுன் ரன்ஷிகா, ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் பதிலடி கொடுத்து விளையாடியது.
தொடக்க வீரரான ரெவன் கெல்லி 62 ஓட்டங்களும், அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களும் சேர்த்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் சரிவை சந்தித்த இலங்கை அணி 48.4 ஓவரிலே 239 ஓட்டங்களுக்கு ஆல்- அவுட் ஆனது.
இதனால் 34 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாகர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
ஆட்டநாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கும், தொடர் ஆட்டநாயகன் விருது ஹிமன்சு ரானாவுக்கும் வழங்கப்பட்டது.