‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். எவ்வாறாயினும் அரை இறுதிக்கு சென்றுவிட்டால் அதுவே பெரிய விடயம்’ என அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி அனைத்து பங்குபற்றும் நாடுகளினது வீராங்கனைகளுக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். சகல அணிகளுக்கும் இந்த உலகக் கிண்ணம் சவால் மிக்கதாக அமையும் அதேவேளை சகல அணிகளும் வெற்றிபெற முயற்சிக்கும் என்ற ஒருமித்த கருத்தை அணித் தலைவிகள் வெளியிட்டனர்.
பெங்களூரிலும் கொழும்பிலும் வெள்ளிக்கிழமை (26) பகல் ஏககாலத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பான ஊடக சந்திப்புகளின்போதே சமரி அத்தபத்துவும் ஏனைய அணிகளின் தலைவிகளும் இதனைத் தெரிவித்தனர்.
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குவாஹாட்டியில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகும்.
இந்த உலகக் கிண்ணம் தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட சமரி அத்தபத்து,
‘நாங்கள் எமது சொந்த மண்ணில் விளையாடுகிறோம். தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ணத்தில் போன்று பெருமலாவிலான இலங்கையர்கள் உலகக் கிண்ண போட்டிகளைக் கண்டு களிக்க வருவார்கள் என்பதை நான் அறிவேன். அதேபோன்று பெருந்தொகையான இரசிர்களை உலகக் கிண்ணத்தின்போது பார்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியாக திட்டமிட்டு விளையாடுவோம். எங்கள் மீது அழுத்தத்தைத் தினித்துக்கொள்ள மாட்டோம். எமது இயல்பான விளையாட்டில் சுதந்திரமாக ஈடுபடுவோம்’ என்றார்.
‘எமது அணியில் பெரு முன்னேற்றம் அடைந்துள்ள வீராங்கனைகள் இடம்பெறுவதால் நான் சுதந்திரமாக விளையாடுவேன். எட்டு வருடங்களின் பின்னர் நாங்கள் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுகிறோம். எங்களிடம் துணிவும் தைரியமும் தாராளமாக இருக்கிறது. எமது அணியில் 19 வயதுக்குட்பட்ட, 23 வயதுக்குட்பட்ட திறமையான வீராங்கனைகளுடன் பல அனுபசாலிகளும் இருக்கின்றனர். ஹர்ஷித்தா சமரவிக்ரம, முன்னாள் உலகக் கிண்ண அணித் தலைவி இனோக்கா ரணவீர, கவிஷா சில்வா, விஷ்மி குணரட்ன, நிலக்ஷிகா டி சில்வா போன்ற சிறந்த வீராங்கனைகள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
‘ஆரம்பப் போட்டியில் இந்தியாவை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என நம்புகிறேன். அதேபோன்று எமது சொந்த மண்ணில் விளையாடவுள்ள அவுஸ்திரேலியாவையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை அரை இறுதிக்கு தகுதிபெறச் செய்வதே எனது குறிக்கோள் ‘ என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண போட்டி கிரிக்கெட்டின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் எனவும் இம் முறை விளையாடும் இளையோரின் ஆற்றல்கள் கணிசமாக வெளிப்படும் எனவும் தெரிவித்த அணித் தலைவிகள், எதிர்கால மகளிர் கிரிக்கெட் சந்ததியினருக்கு இது ஒரு சிறந்த பரீட்சைக்களமாக அமையும் எனவும் கூறினர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குவாஹாட்டி பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண 13ஆவது அத்தியாயம் ஆரம்பமாகும்.
தொடர்ந்து அவுஸ்திரேலியா (அக். 4), இங்கிலாந்து (அக். 11), நியூஸிலாந்து (அக். 14), தென் ஆபிரிக்கா (அக். 18) ஆகிய அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.
நவி மும்பையில் பங்களாதேஷை அக்டோபர் 20ஆம் திகதி சந்திக்கும் இலங்கை மீண்டும் நாடு திரும்பி தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை (அக். 24) சந்திக்கும்.