அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்றும் அவர் தேசப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தார் என்றும் கூறி, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசி அவர் மீது முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தமது அரசியல் எதிரி தொடர்பான தகவல்களைத் தமது சொந்த ஆதாயத்துக்காக திரட்டித் தருமாறு கூறியதாக தெரிவித்த பெலோசி, இதன் மூலம் பதவிப் பிரமாணத்தை டிரம்ப் மீறி விட்டதாகவும் அவர் சாடினார்.
“அதிபரைப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான முதல் படியாக அவர் மீது அதிகாரபூர்வமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
“இதன் தொடர்பில், அவர் மீது விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆறு துணைக் குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதிபர் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்,” என்று பெலோசி கூறினார்.
இதுபற்றிக் கருத்துக்கூறிய அதிபர் டிரம்ப், அரசியல் எதிரியான தம்மீது வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடிக்கும் செயல் இது என்று தெரிவித்தார்.
இந்த விசாரணையின் முடிவில் அதிபர் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதியல்ல என்றபோதிலும், அவரை அவ்வாறு செய்வதற்கு இது தேவையான முதல் படி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அதிபர் டிரம்ப், தமது அரசியல் எதிரியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராகக்கூடும் என்று தற்போதைய நிலையில் இருப்பவருமான ஜோ பைடன் என்பவரின் மகனான ஹன்டர் பைடன் என்பவர் குறித்து விசாரிக்குமாறு உக்ரேனிய அதிபர் விளோடிமிர் ஸெலன்ஸ்கி என்பவரைத் தொலைபேசி உரையாடலில் தூண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், உக்ரேனிய அதிபர் அவ்வாறு செய்தால்தான் அந்நாட்டுக்கான நிதியுதவியைத் தான் வழங்க முடியும் என்று டிரம்ப் கூறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதை மறுக்கும் அதிபர் டிரம்ப், தம்முடைய தொலைபேசி உரையாடலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று பகிரங்கமாகக் கூறுகிறார்.
அத்துடன், தாம் உரையாடலின் முழு விவரங்களையும் வெளியிடத் தயார் என்றும் அவர் விளக்கினார். இதில், தங்களது செயல்பாடு அதிபரின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை அவர் பின்னால் திரண்டெழச் செய்யும் என்று, தொடக்கத்தில் ஆர்வமில்லாமல் இருந்த ஜனநாயகக் கட்சியின் சபை உறுப்பினர்கள் பின்னர் இதற்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய விசாரணை முதல் கட்டம்தான் என்றும் இது தகுதிநீக்கத்துக்கு இட்டுச் செல்லும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறப்படுகிறது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் பின்னர் இது அமெரிக்க செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் அதிபருக்கு எதிரான நடவடிக்கை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
செனட் சபை–யில் அதி–ப–ரின் குடி–ய–ர–சுக் கட்–சிக்கு பெரும்–பான்மை உள்–ள–தால் தற்–போ–தைய நிலை–யில் இது சாத்–தி–ய–மில்லை என்று செய்–தித் தக–வல்–கள் கூறு–கின்–றன.