யாழ். மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை
யாழ். மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் ஜூலை மாத அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் இன்று (16) காலை மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர சபை உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில், சபை அமர்வில் பங்கேற்ற மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் வெளியே சென்று பார்வையாளர் பகுதியில் இருந்து மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.
இதனை அவதானித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் குறித்த விடயம் தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக இந்த உறுப்பினர் செயற்பட்டதால் அவருக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்க தடை விதிப்பது சம்பந்தமாக முதல்வர் சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.
திடீரென எழுந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இளங்கோவன் குறித்த நபர் புதிய உறுப்பினர் என்பதால் மன்னிப்பு வழங்குமாறு கோரினார். இதனையடுத்து ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர் குறித்த உறுப்பினரிடம் தன்னிலை விளக்கம் கோருமாறு கோரினர்.
இதனையடுத்து சபைக்குள் சென்ற குறித்த உறுப்பினர் தான் ஊடகவியலாளர் என பொய் கூறியதுடன் அடையாள அட்டையென ஒரு அட்டையையும் காண்பித்து, அதனால்தான் நேரலை செய்தேன் என்றார்.
ஊடகவியலாளர்கள் இருக்கும்போது உறுப்பினர் அவ்வாறு செயற்பட்டமை தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்த மாநகர முதல்வர், இனிமேல் இவ்வாறு சபை அமர்வில் நடந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பிரிவு உறுப்பினர் ஆவார். அத்துடன் முகநூல் வாயிலாக நேரலை ஒளிபரப்புபவர். இம்முறை தேர்தலில் யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.