இறைவனின் அருளைப் பெறவந்த அப்பாவி பக்தர்களின் உயிர்களை பறிப்பது வீரமும் இல்லை. நியாயமும் இல்லை. அதுவும் கடவுள் பெயரால் உயிர்களை பறிப்பது கண்டனத்திற்கு உரியது என அருட்தந்தை ஜோய் அரியரட்னம் தெரிவித்தார்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து, இன்று தேவாலயத்தின் முன்பாக பக்தர்கள் கூடியிருந்து கண்ணீர் மல்க பிரார்த்தித்தனர்.
இதன்போது எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்த அருட்தந்தை இவரே.
அவர் எம்மிடம் தொடர்ந்து தெரிவித்ததாவது, எந்த மதத்திலும் இன்னொருவரை கொல்லுமாறும் வேதனையை ஏற்படுத்துமாறும் கூறவில்லை. அப்படியிருக்கையில் உயிரை பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஓரளவுக்கு திருப்பலிகளை ஒப்புக்கொடுக்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.