நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால் மன விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், சேப்பாக்கத்தில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவரான சிவச்சந்திரனிடம் கேட்ட போது, ‘பொதுவாக சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் 6 மணிக்கு மேல் எந்தவிதப் போரட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அனிதாவின் இறப்புக்குப் பிறகு பதற்றமான சூழல் நிலவுவதால் மாலை நேரத்தையும் தாண்டி இன்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கேயே உட்கார்ந்து அனிதாவின் இறப்புக்கு நியாயம் கிடைக்கவும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் போராட அனுமதித்தால், தொய்வின்றி அதைத் தொடருவோம். சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எங்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். அதை நாங்கள் மறுத்துள்ளோம். துணை வேந்தர் இதுவரை இந்தப் போராட்டத்துக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. போலீஸும் மோதல் போக்குடன் எங்களை இதுவரை அணுகவில்லை’ என்று தெரிவித்தார்.