அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராகவும் திருமாவளவனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இன்று காலையிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் அனிதாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தரப்பு, ‘அனிதாவுக்கு நேரில் சென்று தினகரன் அஞ்சலி செலுத்துவார்’ என்று தெரிவித்தது. ஆனால், தினகரன் போனால் பிரச்னை நடக்கும் என்று கூறி போலீஸ் அவருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்காது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தினகரன் நேரில் வந்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராக ஒரு கோஷ்டி, ‘கழகத்தைக் கூறு போட்டவனே, கட்சியைப் பிளந்தவனே, வெளியேறு!’ என்று கோஷம் போட்டனர். இன்னொரு தரப்பு தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் பதற்றமான சூழலில் தினகரன் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல, தினகரனுடன் வந்த திருமாவளவனுக்கு எதிராகவும் ஒரு தரப்பு, ‘நீட் தேர்வால் இறந்த ஒரு மாணவியின் உடலை வைத்து சாதிய ரீதியாக அரசியல் செய்ய வேண்டாம்’ என்று கோஷமிட்டது. இப்படியொரு தரப்பு கோஷமிட திருமாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசினர். இந்தக் களேபரமான சூழலுக்கு மத்தியில் தினகரனை அருகிலேயே இருந்த திருமாவளவன், அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தார். இப்படி பல்வேறு தரப்புகள் ஒரே நேரத்தில் கூச்சலிட அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போலீஸார் அனைத்துத் தரப்புகளையும் கட்டுப்படுத்தி அடிதடி ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.