‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்க ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி!
தனக்கு பொருந்துகிற கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து, ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் டைரக்ஷனில் நடிக்கிறார். இந்தியன், குஷி, கில்லி, ரன், நட்புக்காக, 7 ஜி ரெயின்போ காலனி, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் உள்பட பல பிரமாண்டமான படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம், இந்த படத்தை தயாரிக் கிறார்.
தரமான கதையம்சம் உள்ள பிரமாண்டமான படங்களின் தயாரிப்பாளர் (ஏ.எம்.ரத்னம்), நல்ல கதையம்சம் உள்ள படங்களை இயக்கும் டைரக்டர் (பன்னீர்செல்வம்), ரசிகர்களின் ரசனை அறிந்து சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் நாயகன் (விஜய் சேதுபதி) ஆகிய மூன்று பேரும் கைகோர்த்திருப்பது, இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்து இருக்கிறது.
இதுபற்றி டைரக்டர் பன்னீர்செல்வம் கூறும்போது, “என் முதல் படமான ரேணிகுண்டா, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படமும் ரசிகர்களின் ரசனைகளை முழுவதுமாக பூர்த்தி செய்கின்ற சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்கிறார்.