யாழ்ப்பாணத்தை சுனாமி தாக்குமா..? மாறிவரும் காலநிலை
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ‘நாடா’ சூறாவளி வலுவிழந்துள்ளதாக வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்திருப்பதோடு, அடுத்துவரும் மணிநேரங்களில் இயல்பு நிலைக்கு காலநிலை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வடக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததுடன், கடற்பகுதி கடும் கொந்தளிப்பாகக் காணப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுனாமி வரலாம் என்று மக்களிடத்தே சிலர் வதந்தியினை பரப்பியிருந்தனர். ஆனால், இந்தக் காலநிலை மாற்றத்தினால் சுனாமி போன்ற பாரிய தாக்கங்கள் ஏற்படாது என வானிலை அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தினாலேயே இந்த சூறாவளி ஏற்பட்டது என்றும், அது குறிப்பிட்ட சில மணிநேரத்தில் கரையை கடந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் வடமாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதோடு, கடும் குளிரினால் யாழ். மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
இதற்கிடையில் பலமான காற்று வீசியதால் இளைஞர் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சுனாமி வரலாம் என சிலர் மக்களிடையே தகவல்களைப் பரப்பியிருந்தனர்.
ஆனால், கடலில் ஏற்பட்ட இந்த தாழமுக்கத்தினால் சுனாமி வரவதற்கான சாத்தியக்கூறுகள் எவையும் இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
இதேவேளை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடும் குளிரான காலநிலை மாற்றம் இப்பொழுது தான் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.