105ஆவது வயதில் சைக்கிளோட்ட சாதனை படைத்த நபர்
ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து, தனது 105ஆவது வயதில் புதிய சைக்கிளோட்ட சாதனையை நிலைநாட்டி உள்ளார் பிரான்ஸை சேர்ந்த ரொபர்ட் மேர்சண்ட் என்ற நபர்.
ஒரு மணிநேரத்தில் 22.547 கிலோமீற்றர் தூரம் வரை பயணித்து இவர், 105 வயதிற்கு மேற்பட்டோர் என்ற புதிய பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 100 வயதிற்கு மேற்பட்டோருக்கான சைக்கிளோட்ட போட்டியில் பங்குபற்றி கடந்த 2012ஆம் ஆண்டு இவர் சாதனை படைத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனைவிட சிறப்பான ஓட்டத்தூரத்தை கடக்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை எனத் தெரிவித்த அவர், தான் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக இதனை செய்யவில்லை என்றும் 105 வயதிலும் தன்னால் சைக்கிளோட்ட முடியும் என்பதை நிரூபிக்கவே இதனை செய்ததாகவும் குறிப்பிட்டார்.