பிரித்தானியாவில் பூமிக்கடியில் உள்ள நகரம்.. மனிதர்கள் வாழ்ந்து வந்த அதிசயம்: ஆச்சரிய மூட்டும் புகைப்படங்கள்!
பிரித்தானியாவில் பூமிக்கடியில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்திருப்பது என்பது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பர்லிங்டன் பகுதியில் தான் அந்த பாதாள ரகசிய நகரம் உள்ளது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் 1950 ஆண்டு இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அவசர காலங்களில் அரசு தலைமையகமாகவும் இந்த நகரம் செயல்பட்டுள்ளது. வெடிகுண்டுகளால் பாதிக்கப்படாத அளவுக்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த இந்த நகரத்தைப் பற்றி, அந்நாட்டு குடிமக்களுக்குக் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் மருத்துவமனைகள், உணவகங்கள், அலுவலகங்கள், கிடங்குகள் என ஒரு நகரத்திற்குரிய அனைத்து வசதிகளும் இருந்துள்ளது.
இவைகள் தவிர குடிநீர் தேவைக்காக தற்காலிகமாக ஏரியும் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்ற பெருநகரங்களைப் போல் அல்லாமல் பூமிக்கடியில் இயங்கிய இந்த நகரில், காற்றின் ஈரப்பதம் குறையாதவாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்துள்ளது.
சுமார் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நகரம் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன் 1991 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் இந்நகரத்தை மீண்டும் புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்தை பிரித்தானியா கைவசம் வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.