முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைக்காக அரசாங்கத்தினால் செய்யப்பட்ட செலவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அதிகாரி அருண பெர்னாண்டோ என்பவருக்கு 650 பவுண்டுகள் (£650) பணம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவின் பதவிக்காலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரியாக அருண பெர்னாண்டோ பணியாற்றினார் என்றும், பின்னர் அவர் எவ்வித முறையான அறிவிப்பும் இன்றி அப்பதவியில் இருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவு
இந்த வழக்குத் தொடர்பாக சாட்சியங்களைச் சேகரிப்பதற்காக இலங்கைக் காவல்துறை அதிகாரிகள் குழுவினர் லண்டன் சென்றிருந்தபோது, பிளாக்பூல் நகரிலிருந்து வந்த அருண பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்திற்கான செலவுகள், அருணவின் கூட்டாளியான சாயி முகுந்தனுக்குச் சொந்தமான ஸ்கை விங் நிறுவனத்தின் நேரடி ஆதரவுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தச் சாட்சியங்களைச் சேகரிப்பதற்காக ஐந்து காவல்துறை அதிகாரிகளை லண்டனுக்கு அனுப்ப அரசாங்கம் பெருமளவிலான தொகையைச் செலவிட்டுள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், இந்த விசாரணைகளுக்கான செலவுகள் குறித்து ஐந்து மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றஞ்சாட்டியுள்ளது.










