இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் முறையே வருடத்தின் அதிசிறந்த வீரர் மற்றும் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனை ஆகிய பிரதான விருதுகளை வென்றெடுத்தனர்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் உள்ளூர் கிரிக்கெட் அரங்கிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகள், கொழும்பில் மிகக் கோலாகலமாக நேற்று (6) இரவு நடைபெற்ற டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவின்போது விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பிரதான விருதுகளை டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுப்புன் வீரசிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழுத் தலைவர் எரான் விக்ரமரட்ன ஆகியோரின் பிரசன்னத்துடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வழங்கினார்.
கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியமையக்காக பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் அதி உயர் விருதுடன் மேலும் இரண்டு விருதுகள் கிடைத்தன.

இதேவேளை, வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான அதி உயர் விருதை வென்றெடுத்த சமரி அத்தபத்துவுக்கு மேலும் நான்கு விருதுகள் கடைத்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வருடத்தின் அதி சிறந்த வளர்ந்துவரும் வீரர் விருதை காமில் மிஷார வென்றெடுத்ததுடன் அதி சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை இமேஷா துலானி தனதாக்கிக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியிலும் இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதிலும் அரும் பெரும் பங்காற்றிய முன்னாள் இலங்கை அணித் தலைவர்களான மைக்கல் திசேரா, அநுர தென்னக்கோன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
1970கள் வரை சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மைக்கல் திசேரா செயற்பட்டதுடன் அவர் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவரார். அவரது தலைமையிலேயே இந்தியாவுக்கு எதிரான உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

அநுர தென்னக்கோன் இலங்கையின் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவராவார். இங்கிலாந்தில் 1975இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணித் தலைவராக அநுர தென்னக்கோன் விளையாடி இருந்தார்.
அவர்கள் இருவரும் கல்கிஸ்ஸை பரி. தோமாவின் கல்லூரியின் பழைய மாணவர்களாவர்.
இதனைவிட ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது தி ஐலண்ட் பத்திரிகையின் ரீமஸ் பெர்னாண்டோவுக்கும் எம்ரிவியின் முன்னாள் ஊடகவியலாளரும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நேரடி வர்னணையாளருமான கெலும் சிரிமாலுக்கும் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள் (ஆடவர்)
சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்: பெத்தும் நிஸ்ஸன்க
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்: ப்ரபாத் ஜயசூரிய
சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரர்: தனஞ்சய டி சில்வா
சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர்: சரித் அசலன்க
சிறந்த சர்வதேச ஒருநாள் பந்தவீச்சாளர்: அசித்த பெர்னாண்டோ
சிறந்த சர்வதேச ஒருநாள் சகலதுறை வீரர்: வனிந்து ஹசரங்க
சிறந்த சர்வதேச ரி20; துடுப்பாட்ட வீரர்: பெத்தும் நிஸ்ஸன்க
சிறந்த சர்வதேச ரி20; பந்துவீச்சாளர்: துஷ்மன்த சமீர
சிறந்த சர்வதேச ரி20; சகலதுறை வீரர்: தசுன் ஷானக்க
வருடத்தின் அதிசிறந்த வளர்ந்துவரும் வீரர்: காமில் மிஷார
விருது பெற்றவர்கள் (மகளிர்)
சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனை: ஹர்ஷித்தா சமரவிக்ரம
சிறந்த சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளர்: சமரி அத்தபத்து
சிறந்த சர்வதேச ரி20 துடுப்பாட்ட வீராங்னை: சமரி அத்தபத்து
சிறந்த சர்வதேச ரி20 பந்துவீச்சாளர்: கவீஷா டில்ஹாரி
சிறந்த சர்வதேச ரி20 சகலதுறை வீராங்கனை: சமரி அத்தபத்து
வருடத்தின் அதிசிறந்த வளர்ந்துவரும் வீராங்கனை: இமேஷா துலானி
இந்த விருதுகளைவிட கடந்த வருடம் உள்ளூர் பிரதான கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் சம்பயின் அணியினர், உப சம்பயின் அணியினர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
















