போர்க்குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் பேரணி இன்று இடம்பெறவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை அவசியம், இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் கால அவகாசத்தையோ அல்லது கால நீட்டிப்புக்களையோ ஐ.நா. வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்தப் பேரணி முற்றவெளி வரைசெல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, ஈ.பி.டி.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
‘இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவல்லதான நீதிமன்றப் பொறிமுறையொன்று இன்னமும் அமைக்கப்படவில்லை. மாறாக போர்க்குற்ற விசாரணை தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கேட்கின்ற நிலையும், மனித உரிமைகள் பேரவையானது அதற்கான அவகாசத்தை வழங்குகின்ற நிலைமையுமே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை வலுப்படுத்தி உடனடித் தீர்வையும் நீதியையும் நோக்கி அவர்களை நெறிப்படுத்தும் வகையிலே இந்தப்பேரணி நடத்தப்படுகிறது’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.