பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின’ என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார்.
பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார்.
பாரிஸ் நகரில் நடத்ப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, தலையை மூடிய ஆடை மற்றும் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள் சிலர் ஜன்னல்களை அடித்து உடைத்ததுடன், குப்பைகளுக்கு தீவைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு ஆர்ப்பாட்டக்கார்கள் கோருகின்றனர்.
ஆனால், வன்முறைகள் காரணமாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டிய தேவையில்லை என உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் கூறியுள்ளார்.