கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
நாமல் பங்கேற்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்ககாக இந்த விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பசில் ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய செயலாளர் நாயகம் சாகர காரியவசத்தினால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.