“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை நேற்று(புதன்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் சுமுகமான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட பதில் தூதுவர் ‘உண்மையான நட்பு மகிழ்ச்சியின் போதும் கஷ்டத்தின் போதும் ஒன்றாக இருப்பதாகும்’ என்ற சீன நாட்டு கூற்றொன்றையும் குறிப்பிட்டார்.
இலங்கை தமது நாடு தொடர்பில் பின்பற்றிய அந்த கொள்கைக்கு தனது நாடும் மக்களும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக உதவுவது சீனாவின் எதிர்பார்ப்பாகும் என்றும் சீன பதில் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.