இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக வலைபந்தாட்ட அணிக்கு எதிராக களனி பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐந்தாவது வலைபந்தாட்டப் போட்டியில் 13 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் லின்கன் பல்கலைக்கழக அணி 59 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் 18 – 12, 17 – 7 என வெற்றிபெற்ற லின்கன் பல்கலைக்கழக அணி இடைவேளையின்போது 35 – 19 என முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் மிகச் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய இலங்கை அப் பகுதியை 16 – 10 என தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.
ஆனால், கடைசி ஆட்ட நேர பகுதியை 14 – 10 என தனதாக்கிக்கொண்ட லின்கன் பல்கலைக்கழகம் 59 – 46 என வெற்றிபெற்றது.
இதுவரை நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகளில் இலங்கை வலைபந்தாட்ட அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் லின்கன் பல்கலைக்கழகம் 62 – 54, 72 – 55, 68 – 53 என வெற்றிபெற்றிருந்தது.
நான்காவது போட்டியில் இலங்கை 56 – 55 என வெற்றியீட்டியது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நான்கு தடவைகள் சம்பினான நியூஸிலாந்து தேசத்தைச் செர்ந்த பிரபல லின்கள் பல்கலைக்கழக அணியுடன் இலங்கை அணி தோல்வி அடைந்தபோதிலும் ஒவ்வொரு போட்டியில் இலங்கை வீராங்கனைகள் விடா முயற்சியுடன் விளையாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது என வலைபந்தாட்ட விமர்சர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையினால் சாதிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர்கள் கூறினர்.













