நடிகர்கள் ஆரவ்- அருள்நிதி- பேபி கிருத்திகா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அருள்வான் ‘திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ், ஜான் விஜய் ,பேபி கிருத்திகா , ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அடர்ந்த வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு கல்வி கிடைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” நான் மலையேற்றத்தை விரும்பி மேற்கொள்பவன். இது போல் மேற்குத் தொடர்ச்சி மலையில் மலலயேற்றம் செய்து கொண்டிருந்தபோது.. அங்கு எம்மை சந்தித்த ஒரு இளம் மாணவி, ‘எமக்கு கல்வி கற்பிக்க முடியுமா? ‘என கேட்டார். இதில் என்ன சிக்கல்? என விசாரிக்கும் போது… அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கு கல்வி கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கையை பின்னணியாக கொண்டு, உண்மை சம்பவங்களை தழுவி, இப்படத்தின் கதையை எழுதினேன்.
இந்த கதையில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருக்கிறார். மலைவாழ் மக்களுக்கான உரிமைகளுக்காக போராடும் போராளியாக நடிகர் ஆரவ் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் பேசப்படும். ஏனெனில் இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும், துன்பங்களும் இருக்கிறது” என்றார்.












