ஆற்றில் வழுக்கி விழுந்த சிறுவன் சடலமாக கண்டெடுப்பு
அல்பேடா நகரின் பன்ப் பகுதியில் உள்ள யோஹோ ஆற்றில் வழுக்கி விழுந்து காணாமல் போயிருந்த சிறுவனின் உடல் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது குடும்ப நண்பர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெஹ்ஷாட் அஹமட் எனப்படும் 11 வயது சிறுவன் உட்பட அவனது குடும்பத்தினர் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் சுற்றுலா சென்றுள்ளனர். அன்று மாலை வேளையில் அவர்கள் யோஹோ ஆற்றுப் பகுதிக்கு சென்ற வேளையில் பெஹ்ஷாட் அஹமடும் மற்றொரு சிறுவரும் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளனர்.
பின்னர் மற்றைய சிறுவன் குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளான். எனினும் பெஹ்ஷாட் அஹமட் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இந்நிலையிலேயே தற்பொழுது அவரது உடல் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து உறுதிப்படுத்திய அவரது குடும்ப நண்பர், ‘காணாமல் போய் பல நாட்களாகின்ற நிலையில் தற்பொழுது பெஹ்ஷாட் அஹமடின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் Takakkaw நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் காண்பித்தனர்’ என்று தெரிவித்தார்.