கூட்டு எதிரணியின் இன்றைய கூட்டத்துக்குள் புகுந்து அசம்பாவிதங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சதிசெய்யலாம் எனவும், அவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால், அதில் யாரும் சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் விலகியிருந்து, தமது கையடக்கத் தொலைபேசியினுாடாக ஆரம்பம் முதல் இறுதிவரை அச்சம்பவத்தைப் பதிவு செய்தால் போதுமானது எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தி, எமது ஆதரவாளர்களை பிரச்சினைக்குள் மாட்டிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால், எமது ஆர்ப்பாட்டத்தை தவறான முறையில் ஊடகங்களுக்கு சித்தரித்துக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.