அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் தேவையில்லை என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் குறிப்பிடுகையில், “ஊரடங்குச் சட்ட காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் நடவக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இச்சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசியச் சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி வழங்குப்பட்டுள்ள சுகாதார அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும்.
அத்தோடு சமுர்த்திப் பயனாளிகள் ஆறு மாதங்களுக்குப் பின்னர் செலுத்தக்கூடிய வகையிலே பத்தாயிரம் ரூபாயினை வட்டியின்றிய கடனாக சமூர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து கடனை இரண்டு கட்டமாக வழங்குவதற்கு வவுனியா மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக இப்பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்ந்து, நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெல் விற்பனை செய்யத் தயாராக இருக்கும் விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையோடு தொடர்புகொண்டு தங்களின் நெல்லினை விற்பனை செய்ய முடியும்.
அத்தோடு 2020ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச் செய்கைக்கான உர விநியோகத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறன. சிறு போகத்தை மேற்கொள்கின்ற விவசாயிகள் வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து உரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கமநல திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.













