மேலைத்தேய மற்றும் சுதேச மருத்துவ முறைகள் பற்றி அத்துறையிலுள்ள நிபுணர்களை அழைத்து கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார, வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ஷ இந்த பணிப்புரையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றுடைய முதலாவது நோயாளி தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளார். வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு வைத்தியர்களால் முடிந்துள்ளது.
முழுமையான அர்ப்பணிப்புடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள், மேலும் மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சீனாவின் வூகான் நகரிலிருந்து நாட்டுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக வழங்கி அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
அத்தோடு சுற்றுலாத்துறையை பாதுகாத்து தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்.
மேலும் நோய் பரிசோதனைக்காகவும் வைத்தியசாலைகளுக்கான வசதிகளையும் முடியுமானளவு விரிவுபடுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.