ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல.
அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.