கன்னட சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது கே.பாலசந்தரால் டூயட் படத்திற்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தொடர்ந்து பாலசந்தர் படங்களில் நடித்து புகழடைந்த அவர், பின்னர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரானார். அதோடு டூயட் முவீஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து, அதில் கதையின் நாயகனாகவும் நடித்த பிரகாஷ்ராஜ், சில படங்களையும் இயக்கினார்.
இப்படி தமிழ் சினிமா உலகமும், தமிழக ரசிகர்களும் அவருக்கு பெரிய இடத்தை கொடுத்து ஆதரித்தார்கள். அந்த வகையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் நடித்து புகழடைந்தவர் பிரகாஷ்ராஜ்.
சமீபத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டில்லியில் பிரச்சாரம் செய்த அவர், தமிழ் மாணவர்களால் டில்லியில் உள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோய் வருவதாக ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்று டில்லியில் உள்ள தமிழ் மாணவர் அமைப்பு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தயாரிப்பாளர் கே.ராஜனும் பிரகாஷ்ராஜ்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், தமிழர்களால் பெரிய நடிகராக வளர்ந்த பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து தமிழர்களுக்கு எதிராக பேசுகிறார். தனது இந்த பேச்சுக்கு தமிழர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் புதிதாக தமிழில் அவரை எந்த படத்திலும் நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படி தனக்கு எதிரான கருத்துக்கள் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்திருப்பதை அடுத்து, நான் சொல்லப்பட்ட கருத்து உள்நோக்கத்துடன் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.