பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா. தமிழ் சினிமாவில் இவரைத் தெரியாதவர்கள் இல்லை. கடன் கொடுப்பதும், திருப்பித் தராதவர்கள் மீது வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுப்பதும் இவர் வாடிக்கை. பல தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறிப்பாக இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு கொடுத்த 65 லட்சம் ரூபாய் கடனுக்கு அவரது சம்பந்தி ரஜினிதான் பொறுப்பு என்று ரஜினி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கந்துவட்டி வழக்கு ஒன்றில் மகனுடன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் முகுந்த்சந்த் பேர்தரா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. சவுகார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போத்ராவுக்கு மனைவியும் சந்தீப் போத்ரா, சுகன் போத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர்.