தென்னிந்திய சண்டை கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தின் 52ம் ஆண்டு விழா, சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமுத்திரகனி உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டார்கள். விழாவில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் கலைஞர்கள் 5 பேர் கவுரவப்படுத்தப்பட்டார்கள்.
விழாவில் சமுத்திரகனி பேசியதாவது: இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள். தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ளப்பட்டு விட்டோம். அடுத்ததலை முறையினரின் கதி என்னவாகும் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள். அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கிறது. எங்கள் நாட்டின் இயற்கை வளம் பாதுகாக்கப்படுவதே அந்த மரங்களால் தான். அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது. நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியாக இருக்குன்னு அவங்களே சொல்லும் போது, நாம எப்படி பாதுகாக்கணும். நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும் செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்.