முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினை மொட்டு அணி உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல் பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கருதப்படும் பின்னணியிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிடும் கோட்டபாய ராஜபக்ஷவின் முடிவுக்கு தடையை ஏற்படுத்தவே, அவருக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பின்னர் அவர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு சென்று வந்திருந்த போதும், தற்போதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

