2011ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த படம் மங்காத்தா. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து மங்காத்தா-2 எப்போது உருவாகும்? என்று அஜித் ரசிகர்கள், வெங்கட்பிரபுவைக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
“கதையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அஜித் தான் முடிவு சொல்ல வேண்டும்” என்று பதில் கொடுத்து வந்தார் வெங்கட்பிரபு. அதோடு மங்காத்தா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அஜித்தை நட்பு அடிப்படையில் தான் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் வெங்கட்பிரபு. இதனால் அஜித் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியது. அதனால் மங்காத்தா-2 குறித்து தொடர்ந்து அவரை நச்சரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி அளித்துள்ள பேட்டியில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், கண்டிப்பாக சீக்கிரமே அஜித் – வெங்கட்பிரபு ஒரு படத்தில் இணையப் போகிறார்கள் என கூறியிருக்கிறார்.
ஆனால் அது மங்காத்தா 2 படமா என்று குறிப்பிடவில்லை. இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

