குழுநிலை விவாதத்தின்போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதங்கள் இன்றும் (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தொடரவுள்ளன. இதன்போதே குறித்த நிதி ஒதுக்கீடுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினதும் உள்துறை மற்றும் உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும் நிதி ஒதுக்கீடுகளே இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த இரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்த குழுநிலை விவாதத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தன.
இதனால், சுமார் ஐந்தரை இலட்சம் அரச பணியாளர்களுக்கு சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்படி இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் சில திருத்தங்களுடன் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

