ஆப்கானிஸ்தானின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்கள் இடையே கடந்த 17 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஆப்கான், அமெரிக்கா மற்றும் தலிபான் என மூன்று தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டூஸ் நகரில் தலிபான்களுக்கு எதிராக கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சர்வதேச படையினர் தாக்குதல் நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 10 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐநா தூதரகம் தெரிவித்துள்ளது.

