முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி தலைமறைவாகியுள்ள அவர், இன்று கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாவாரென கூறப்படுகிறது.
இதன்போது அவரிடம் குற்றச்சாட்டு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படுவதுடன், வாக்குமூலமும் பெறப்படவுள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையிலேயே தன்னைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்சநீதிமன்றம், அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

