மெக்ஸிகோவின் போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘எல் சாபோ’ குஸ்மன் (“El Chapo” Guzmán) மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) நியூயோர்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குஸ்மன் (வயது-61) மீது போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத துப்பாக்கிகளை உடன் வைத்திருந்தமை, நிதி மோசடி உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கான தண்டனை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் இவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2001ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பினார்.
அதனைத் தொடர்ந்து, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
ஆனால், மெக்ஸிகோவின் மிகப் பாதுகாப்பான சிறையிலிருந்து சுரங்கப் பாதை தோண்டி, 2015ஆம் மீண்டும் தப்பினார்.
அதனை தொடர்ந்து மெக்ஸிகோ இராணுவம், கடற்படை, பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.